Monday, August 31, 2009

பிள்ளையார் பிடிக்கப்போய் தொடர்ச்சி................


கன நாளுக்கு பிறகு ரிசப்சனோ,சாமத்தியவீடோ கொண்டாட துவங்கிவிட்டார்கள்.சரி அந்தப்பக்கமாய் ஒருக்கால் நடந்து போவம் என்ற முடிவில் ஒரு பயணம்.கைத் தொலை பேசி சிணுங்கியது.கனடாவில் இருந்து எனது நண்பன்,மச்சான் லன்டன் என்ன சொல்லுது இது முதற் கேள்வி எனது பதில் அது ஒக்கேடா.மச்சான் சனம் எல்லாம் எப்பிடி இது அடுத்த கேள்வி, சனம் ஒகே மச்சான் நான் என்ன எம் மீ யோ சனம் எப்பிடி எண்டு சொல்ல இது அடுத்த பதில்.வேலையெல்லாம் எப்பிடி அடுத்த கேள்வி, வேலை ஒரு மாதிரி போகுது இது என்னோடை பதில்,என்ன ச்லோவை கதைக்கிறாய் இது அடுத்த கேள்வி இப்பத்தான் வேலையாலை வாறன் கொஞ்ஜம் களைப்பு அது தான் பதில் சிலோவய் இருக்கு இது நான்.அவனுக்கு எனது பதில் அலுப்பு தந்திருக்க வேணும் போல தனது கதையை மாற்றினான். டேய் கலியாணம் கட்டிப் போடாதை,கட்டினாலும் கனடாவிலை கட்டிப் போடாதை, அப்பிடி கட்டினாலும் பொம்பிளையை பெத்துப் போடாதை என்று சொன்னான்.

எனக்கு அவன் எதை சொல்ல வந்தான் என்று விளங்கவே இல்லை,கனடா எனக்கு தெரியாத தேசம் சும்மா நக்கலாக அவனுக்கு சொன்னேன் கள்ளிப்பால் கொடுத்து கொம்மா உன்னை சாக்காட்டி இருக்கலாம் சும்மா அறுக்காதே அவன் சொன்னான் கொம்மா உனக்கு நெல்லை தீத்தி இருக்கலாம் என்று.சரிடா திரும்பவும் விடிய வேலை இனி போய் சாப்பிட்டு படிக்க வேணும் நாளைக்கு உனக்கு அடிக்கிறன் என்று நான் சொல்ல அவன் விடுகிற மாதிரி தெரியவில்லை.


நீ ஒன்டும் கதைக்க வேண்டாம் நான் கதைக்கிறன் கேள் கேக்கிறியா இல்லையா? இதற்கு மேலும் கேட்காமல் இருக்க முடியவில்லை சரி கேக்கிறன் கதை என்று சொன்னேன்.முதல் தொடக்கமே எனக்கு கஸ்டமாய் இருந்தது அதற்கு காரணம் அவன் ஆரம்பித்த வசனம் எங்கடை எளிய சாதியள் இங்கே கன்டாவிலை
என்று ஆரம்பித்தான் எனக்கு ஒன்று மட்டும் தெளிவாய் சற்று லேட்டாய் விளங்கியது. பையன் தண்ணி அடித்துவிட்டுத்தான் ரெலி போன் அடிச்சிருக்கிறான் என்று.ஒரு நிமிசம் பொறடா என்று சொல்லிட்டு நானும் ஓடிப்போய் திறந்திருந்த ஒரு கடையில் ஒரு பீர் வாங்கிட்டு பல்லால் மூடியை திறந்து ஒரு முடறு குடித்துவிட்டு அவனின் கதையை கேட்க ஆயத்தமானேன்.அவன் திரும்பவும் எங்கடை எளிய சாதிகள் எண்டான். நான் அவனிடம் டேய் தண்ணி போட்டிட்டாய் எண்டதுக்காக கண்டபடி கதைக்காதே.ஒழுங்காய் கதை என்றேன்.திரும்பவும் சொன்னதையே சொன்னான்.சரி அப்பிடியே இருக்கட்டும் சொல்ல வந்ததை முதலில் சொல்லு என்றேன் அவன் சொன்னதை கேட்டு நான் வடிவேலு போல அப்பிடியே ஷாக் ஆயிட்டன்.

அவன் சொன்னது இது தான் இப்ப எல்லாம் சாமத்திய வீடு என்றால் கனடாவில் வயசுக்கு வந்த பெண் மணவறைக்கு வரும் நேராம் கெலிகப்டரை வாடகைக்கு பிடித்து பூ தூவிகினம்.இது எவ்வளவு கொடுமை தெரியுமோ சும்மா காசு இருக்கிறதை காட்ட இந்த நாயளுக்கு வேறை வழி திரியேல்லை போலை எண்டான்.நான் சொன்னேன் அது பிழைதான் . அவன் பதில் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.அவனின் பதிலுடன் நான் கண்ட மண்டப கதைகளுடன் அடுத்த வாரம் பதிவை தொடர்கிறேன்..................

Read more...

Saturday, August 1, 2009

பிள்ளையார் பிடிக்கப்போய்...தொடர்ச்சி........


நான் இரயிலிருந்து இறங்கியாயிட்டுது, ஒரு முறை கண்ணாடி வழியாக பார்தேன் நம்ம டீ வை ஓ நண்பர் கைத்தொலை பேசியில் சரியான பிசி,என்ன நாட்டு பிரச்சினையையோ இவர் கதைக்கப் போறார் அல்லது இப்ப தடுப்பு முகாம்களுக்குள்அடைபட்டு கிடக்கும் நம்ம மக்களை பற்றியோ இவர் கதைக்கப் போறார் என்று நான் எனக்குள் நினைத்து கொண்ட போது தான் எனது முதல் சந்திப்பில் அவர் சொன்ன ஒரு விசயம் ஞாபகம் வந்தது.அது என்னவென்றால் தன்னை அறிமுகம் செய்த பின்னர் நாங்கள் எல்லாம் எதுக்கு ஆர்ப்பாடம் போறம் தெரியுமா சும்மா நல்ல ஜாலியா இருக்கும் மாமா வருவாங்கள் ஆத்தல் எடுக்கலாம்.இப்பிடி சொன்னதை நினைத்து கொண்டே ஒரு மாதிரி வெளியே வந்தாயிட்டு.


மீண்டும் பதிவு போடும் ஆர்வம் .மனக்குரங்கு வேறு பக்கமாக நினைவை கிளறியது.அது தான் தான்.அடிக்கடி எழுத்துப்பிழை நான் விடுவதால் தவறாக இரண்டு முறை தான் என்று கீ
போட்டில் தட்டச்சு செய்து விட்டதாக நினக்க வேண்டாம்.இது ஒரு தான் சொல்லின் தார்ப்பரியம் தான்.சின்ன வயதில் மார்க் குறைவாக வாங்கினால் பதில் வினாத்தாள் கடினம் அது தான்... வகுப்பில் அடி வாங்கினால் அது அவனால் தான்....ஏனடா அந்த பெட்டைக்கு கடிதம் கொடுத்தனி? அவவும் பாத்ததால் தான் இப்படி சின்ன வயதில் பல தான்கள். வெளி நாட்டில் அதிகாரிகள் கேள்வி: ஏன் நாட்டை விட்டு வந்தனீர் ? ஆமியாலையும்,புலியாலையும்,ஏனைய இயக்கங்களலையும் தான் இப்படி ஒரு தான்.ஆனால் எனக்கு கொஞ்ச நாளாய் ஒரேயொரு தான் தான் மூளையையும்,காதையயும்,கண்ணையும் ஆக்கிரமித்து இருந்தது.ஒருபக்கமாக வலது பக்கத்தில் பார்த்ததும் கேட்டதும் படித்ததுமாக ஒரு தானும் மற்றைய பக்கமாக இடது பக்கத்தில் பார்ததும் கேட்டதும் படித்ததுமாக ஒரு தானுமாக முற்று முழுதான தான் ஆக்கிரமிப்புக்கு நான் உட்பட்டிருந்தேன்.

டக்கிளஸால் தான்,கருணாவால் தான்,ஆயுத சப்பிளை இல்லாததால் தான்,போராளிகள் பற்றாகுறையால் தான், இந்தியாவால் தான்,அமெரிக்காவால் தான்,சீனாவால் தான்,பாகிஸ்தானால் தான்,உலக நாடுகளால் தான்,பனிப்போர் காலம் முடிவடைந்தமையால் தான்,மக்கள் பங்களிப்பு போதாமையால் தான், நடைபெற்ற ஊடுருவல்களால் தான்,விமான எதிர்ப்பு ஏவுகணை இல்லாமையால் தான்,றோவால் தான், சி ஐ ஏ ஆல் தான்,தமிழ்செல்வன் உலக நாடுகளில் பார்த்தவற்றை சொல்லாமையால் தான்,பாலசிங்கம் சொன்னதை கேட்காமையால் தான்,பேச்சுவார்த்தைக்கு போனதால் தான்,பின்னர் வெரித்தாஸ் கஸ்பர் தமிழின உணர்வாளர்களால் தான் என்று நீண்ட இந்த தான் கடைசியாக சீமானின் வார்த்தையாக தமிழக தமிழர்கள் தான் என்ற தானோடு வலது பக்கமும்

சகோதர இயக்க படுகொலையால் தான்,ஏக பிரதிநிதிதுவ கோட்பாட்டால் தான்,ரஜீவ்காந்தி கொலையால் தான்,இந்தியாவை பகைத்து கொண்டதால் தான்,வெறும் சுத்த இராணுவ கண்ணோட்டத்தோடு ஒரு போராட்டத்தை நகர்த்தியதால் தான்,சமாந்தரமான ஒரு அரசியல் கட்டமைப்பை கொண்டிருக்காததால் தான்,புரட்சிகர சக்திகளோடு ஐக்கியம் கொள்ளாததால் தான்,சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து கொள்ளாமையால் தான்,இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாததால் தான்,மேற்குலக நாடுகளுக்கு சாதகமாக செயற்பட்டதல் தான்,சாதிய வேற்றுமைகளுக்கு எதிராக போராட்டத்தை சமாந்தரமாக முன்னெடுக்காமையால் தான்,கொரில்லா போர்முறை வடிவத்தை கைவிட்டு மரபு வழி யுத்த பாதையை தேர்ந்தெடுத்தமை தான்,வெளி நாடு வாழ் தமிழ் சமூகம் தான் இப்படி என்ற சில பல தானோடு இடதுபக்கமுமாக

தானால் ஆக்கிரமிக்கப்பட்ட நான் ஏனோ தானோ என்று தெருவோரம் எனது வீட்டுக்கான நடையை ஆரம்பித்தேன்,எனது வீட்டிற்கு செல்வதற்கு இரு பாதைகள் தமிழ்கடைகள்,தமிழ் உணவகம்,தமிழர் சிகையலங்கார நிலையம், நம்ம சரவுணபவன் அண்ணாச்சியின் உணவகம்,தமிழன் வீடு வாங்கி விற்கும் வியாபார நிலையம் என்று வரிசையாக இருக்கும். இதை விட இன்னொரு சுவராசியம் இஸ்ரேல் நாட்டுகாரனுக்கு சொந்தமான ஒரு மண்டபம்.வாடகை அதிகம் .எனக்கு சில நேரம் அந்த மண்டபத்தை கடக்கும் போது இஸ்ரேல்காரன் நம்மடை ஆக்களை நம்பி தான் அதை கட்டினானோ என்று ஒரு நினவு வரும்.வெள்ளி,சனி, ஞாயிறு கிழமைகளில் நம்மடை ஆட்களின்ரை பிறந்த நாளும், கலியாண் வீட்டு ரிசப்சனும்,பூப்புனித நீராட்டு விழாவும்,இசை மாலை என்றும்,கலை இரவு என்றும் ஒரே ஆர்ப்பாட்டமாய் இருக்கும்,ஆனால் கன நாட்களாக அங்கே ஒரே மயான அமைதி நம்மடை மக்கள் வன்னி மக்களின் துயரோடு மூழ்கிப்போய் அந்த மண்டபத்தில் பெட்டைக்கு தோய வாக்கவும் இல்லை,பிறந்த நாள் இன்று பிறந்த நாள் என்று பாடவும் இல்லை,அடுத்த பாடகர் என்ற அறிவுப்பு வரவும் இல்லை. சும்மா அப்பிடி போடு என்று குத்துப்பாட்டு போட்டு ஆரம்பித்து இறுதியாக அங்கிளுக்கும் அன்ரிக்குமாக ஒரு பாட்டு போடுங்கோ என்று ஒருவர் சத்தமிட அங்கிள் அன்ரியை கையில் பிடித்தபடி தொண்டையில் நனைந்த விஸ்கி குடுக்கும் உசுப்பில் சம்மந்தமேயில்லாமல் யாருக்காக இது யாருக்காக என்று மைக்கை பிடிக்க அன்ரி சரோஜாதேவி ரேஞ்சுக்கு வெக்கப்பட்டு பக்கத்தில் இருப்போரிடம் இவர் அந்தக்காலத்தில் நல்லய்ப் பாடுவார் என்ற புழுகும் அடங்கி நிசப்தமாய் இருந்தது, நான் நடந்த அன்று தூரத்திலையே காதுவாக்கில் ஒரு பாட்டு சத்தம்..டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை................அது அதே இடம் .....தான்.......... நடையை சற்று விரிவுபடுத்தினேன்................

தொடரும்...........

Read more...

Monday, July 27, 2009

பிள்ளையார் பிடிக்கப் போய்


பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்ததாக சொல்வார்கள் அதைப்போலத்தான் இந்தப் பதிவும்.பதிவு போட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது மனதில் பட்டதை கண்டதை கேட்டதை இப்படி எல்லாவற்றையும் பதிய வேண்டும் என்ற நினைவு எனது வேலையிடத்தில் உதித்தது.பூங்காவும் தேம்ஸ் நதிக்கரையும் தான் எனக்கு எழுதுவதற்கான கற்பனையை திறந்துவிடும் என்று சொல்வதற்கு நான் கவிஞனும் அல்ல எழுத்தாளனும் அல்ல.ஆனால் எப்படியும் ஒரு பதிவு போடு அப்புச்சி என்று மனம் அடித்துக்கொண்டது.எதை எழுதலாம் எப்படி எழுதலாம் இப்படி பல கேள்விகள்.ஒரு மையவாத சித்தாந்தக்குள் சுழல்போருக்கு சிலதை சொன்னால் அல்லது எழுதினால் பிடிக்காது.உடனடியாக உண்மைக்கு முன்னால் நடுநிலைமை என்ற ஒன்று இல்லை என்று தூக்கி பிடிப்பார்கள்.அவர்களின் வாதம் கூட எனக்கு தேவையில்லை.இப்படியான நினைவோடு எனது இரயில் பயணத்தை ஆரம்பித்தேன்.இது ஒன்றும் இரயில் பயணங்களில் சினிமா அல்ல.வேலை முடிந்து வீடு செல்லும் இரயில் பயணம்.எனக்கு முன்னால் ஒரு வாலிபன் அமர்ந்திருந்தான்.காதில் தோடு. மூக்கில் மூக்குத்தி,தலையில் ஓர் துண்டு, இறுக கட்டியிருந்தான்.வேண்டுமெண்றே தனது நீள காற்சட்டையை இடுப்புக்கு கீழே இறக்கி விட்டிருந்தான் என்பதை விட இரக்கி விட்டுக்கொண்டே இருந்தான்.அந்த வாலிபனுடன் பேசுவதற்கு எனக்கு ஆசையாக இருந்தது ஆனாலும் ஒரு பயம் ,பேசாவிட்டால் என்ன ஒரு முறை வடிவாக ஆளை பார்த்துவிடுவோம் என்ற முடிவில் வடிவேலு பாணியில் சொல்வதானால் ஈரல் குலை நடுங்க பார்த்தேன் ஆளை....அட இவனா அவன்?????

வன்னி மக்கள் எமது சொந்தங்கள் யுத்தத்தின் இறுதி விலையை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.கிரிக்கட் ஸ்கோர் பார்ப்பது போல நமது புலம்பெயர்ந்த அல்லது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூக கல்வியில் பாடப்புத்தகத்தில் மட்டும் நாடுகளை பார்த்தோர்தமது புதிய நாடுகளில் ஸ்கோர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.அப்போது ஒரு ஆர்ப்பாட்டம்,எனது நண்பன் கூட விடுவதாய் இல்லை அவன் நியாயமாக ஒரு கேள்வி கேட்டான் டேய் தேவையில்லாத பேரணிக்கு எல்லாம் போகிறாய் ஜீ 20 எதிர்ப்பு எல்லாம் தேவையில்லை வாறியா வரமாட்டியா?சரிடா வாறன் என்றுஅவனுக்கு சொல்லியாயிற்று.அதே திகதி என்னை எழுப்பினான்.அவன் சொன்னான் மச்சான் நான் பஸ்சிலை போறன் நீ அந்த இடத்துக்கு நேராக வந்திரு எண்டான்.சரிடா ஒகே எண்டேன்.இரயிலில் ஏறியதும் அப்பத்தான் நம்ம தமிழ் தேசியவாதியை கண்டேன்.அவர் தான் முதல் சொன்ன ஆள்.அவருக்கு பக்கத்தில் ஒரு பெண்.ஏனடா இதுக்குள் ஏறினன் எண்டு யோசித்தேன்.அந்த பெண்ணிடம் கேட்டார்கள் நான் சூ...ஒகே யா எண்று.அப்பிராணிதனமாக நான் எனது இருக்கையில் அமர்ந்திரிந்தேன்.அவர்கள் ஒரு ரீசேட் போட்டிருந்தார்கள்.அதில் பிரபாகரன் படமும் பின்புறத்தில் தமிழீழ வரை படமும் அச்சிட பட்டிருந்த்தது.நீங்கள் யார் என்று ஒரு கேள்வி கேட்டேன் தாங்கள் தான் ரி யை ஒ என்னு பதில் வந்தது.நான் அப்படியே ஸாக் ஆயிட்டன்...............அடுத்த பதிவில் இரயிலிடுந்து இறங்கியது முதல் நடைபெற்ற நிகழ்வுகளோடு சந்திப்போம்


அன்புடன்
அப்புச்சி

Read more...

Saturday, July 4, 2009

மனு நீதி.....


இரவுக்கும் பகலுக்குமான வெளி
தனக்கான வர்ணத்தை பூசியது இல்லை,
வானத்துக்கு வர்ணம் பூசியோர் கனவு
புதியதோர் வெளியை தேடி கொண்டது,
அர்த்தநாசிருவரை நம்பும்படி
சாம்பல் வெளி கேட்டுக் கொண்டது,

மறைந்து போன புள்ளியை,
கேள்விகுறிகளும்,ஆச்சரிய குறிகளும்,
தொடர் புள்ளிகளும் ஆக்கிரமித்து கொண்டன,
புதிய கேள்விகளும் புதிய பதில்களும்
பிறப்பெடுத்தன புதிய சபையில்.

மனுநீதியின் புதிய சபையில்
நிறுத்தப்பட்டேன்
அப்போது கேள்வி கேட்டோர் எல்லாம் புதியவர்கள்,
பதில்களை கேட்க அவர்கள் தயாரகவில்லை,
தொலைத்துவிட்ட ஒரு கனவை பற்றியே
மீண்டும் மீண்டும் பேசினார்கள்...
அது தான் எனது கனவும் என்றேன்,
நம்ப மறுத்தார்கள்,
உனக்க்கான கனவை நீ தொலைத்து விட்டாய்,
நீ மனிதனும் அல்ல தமிழனும் அல்ல என்றார்கள்.
நடு நடுவே தமக்குள் நிறைய பேசினார்கள்,

அவர்களின் பகல் விடிந்தது
எனது இரவு விடிந்தது...
கனவு தெளிந்து விழித்தபோது
வல்லூறு பார்வையிலிருந்து தப்பிய கோழி குஞ்சுகள்,
கழுகுகளால் குதறப்பட்டிருந்தன......

Read more...

Saturday, March 28, 2009

ஜீ 20 எதிர்ப்பு பேரணியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ......

Read more...

Wednesday, December 31, 2008

இலங்கை அரசின் அந்தக்கால பயங்கரவாதப் ப‌ட்டியல்......



இலங்கை அரசாங்கம் தமிழ்மக்கள் மீதான தனது இன அழிப்பு போரை ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் அப்போதைய தமிழ் தலைவர்களின் பாராளுமன்ற அரசியல் பாதையில் நம்பிக்கை இழந்த தமிழ் இளையவர்கள் ஆயுத போராட்டத்தின் மூலம் தான் தமிழ் மக்களை பாதுகாக்க முடியும் என்ற முடிவிற்கு வந்தார்கள்.தனது இராணுவ சக்தியையும் இராணுவ வளத்தையும் மிலேச்சத்தனமாக ஏவிவிட்டு தமிழ் மக்கள் மீதான தனது போரினை அரசாங்கம் நடத்தும் போது தமிழ் மக்களின் ஆயுத பலம் தான் மக்களை பாதுகாக்கும் என்ற வரலாற்றின் நியதிக்கு தள்ளப்பட்டார்கள்.பல இயக்கங்கள் தோற்றம் பெற்றன என்றாலும் மக்களால் அறியப்பட்ட பிரதான‌ இயக்கங்களாக ஐந்து இயக்கங்கள் இருந்தன.விடுதலைக்காக புறப்பட்ட இயக்கங்கள் எல்லாவற்றையும் பயங்கரவாத இயக்கமாகவே இலங்கை அரசு அறிவித்தது.விடுதலை இயக்கங்கள் இடையே ஏற்பட்ட பகைமை உணர்வு ஒரு துன்பியல் வரலாறாகியது.அதன் விளைவு இந்திய இராணுவ காலத்தில் இந்தியாவிற்கு சாதகமாகவும்,இன்று இலங்கை அரசுக்கு சாதகமாகவும் மாறியுள்ளது கண்கூடானது.இன்று பயங்கரவாதிகள் என்று தனது சுட்டுவிரலை புலிகளை மட்டும் நோக்கி நீட்டும் இலங்கை அரசு தன்னுடன் சேர்ந்திருக்கும் பயங்கரவாதிகளையும் தனது இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவோரையும் சனநாயக சக்திகளாக பிரசாரம் செய்கிறது.இது இன்றைய நிலை இப்படியான நிலையில் அன்று ஒரு காலத்தில் இலங்கை அரசால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்ட இயக்கங்கள்,அமைப்புக்கள்,குழுக்கள் ஆகியவற்றின் பெயர்களை இந்த வருட இறுதியில் பதிவு செய்கிறேன்.ஏதாவது பெயர்கள் தவறவிடப்பட்டிருந்தால் பின்னுட்டத்தில் அறிய தரவும்.பிரித்தாளுவது என்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு கைவந்த கலை,முரண்பாடுகள் இயல்பானவை தவிர்க்கமுடியாதவை ஆனால் உண்மை என்பதற்கு முன்னால் முரண்பாடு என்ற கருத்தாக்கம் தோற்று போகிறது,எமது ஒற்றுமையின் பலத்தின் மூலம் எமது சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்போம் யாசர் அரபாத் இல்லாத பாலஸ்தீனம் இந்த வருட இறுதியில் எமக்கு இன்னொரு செய்தியையும் சொல்லி நிற்கிறது........



தமிழீழ விடுதலை புலிகள் (LTTE)


த‌மிழீழ‌ விடுத‌லை இய‌க்க‌ம்(TELO)


த‌மிழீழ‌ ம‌க்க‌ள் விடுத‌லை க‌ழ‌க‌ம்(PLOTE)


ஈழ‌ ம‌க்க‌ள் புர‌ட்சிக‌ர‌ விடுத‌லை முண்ண‌ணி(EPRLF)


ஈழ‌ புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் அமைப்பு(EROS)


த‌மிழீழ‌ விடுத‌லை இராணுவ‌ம்(TELA)


த‌மிழீழ‌ இராணுவ‌ம்(TEA)


த‌மிழீழ‌ விடுத‌லை தீவிர‌வாதிக‌ள்(TELE)


த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வை

தீப்பொறி


செம்ப‌டை(RA)


புர‌ட்சிக‌ர‌ த‌மிழீழ‌ ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம்(TERPLA)


தமிழீழ புரட்சி அமைப்பு(TERO)


தமிழீழ விடுதலை கெரில்லாக்கள்(TELG)


தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(NLFT)


த‌மிழீழ‌ பாதுகாப்பு ப‌டை(TEDF)


இல‌ங்கை விடுத‌லை த‌மிழ் இராணுவ‌ம்(IFTA)


த‌மிழீழ‌ தேசிய‌ இராணுவ‌ம்(TENA)


த‌மிழ் ம‌க்க‌ள் பாதுகாப்பு அமைப்பு(TPSO)


த‌மிழீழ‌ கொமாண்டோக்க‌ள்(TEC)


த‌மிழீழ‌ க‌ழுகு முன்ன‌ணி(TEEF)


க‌ழுகு ப‌டை(EM)


த‌மிழீழ‌ கொரில்லா இராணுவ‌ம்(GATE)


ச‌மூக‌ புர‌ட்சி ச‌மூக‌ விடுத‌லை(SRSL)


மூன்று ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள்(THREE STARS)


ஈழ‌ தேசிய‌ ஜ‌ன‌நாய‌க‌ விடுத‌லை முன்ன‌ணி(ENDLF)


த‌மிழீழ‌ விடுத‌லை கோப்ராக்க‌ள்


த‌மிழீழ‌ புர‌ட்சிக‌ர‌ விடுத‌லை இய‌க்க‌ம்.(RELO).


Read more...

Monday, November 24, 2008

ஸ்ராலின் கிராட் சமர்..............


சுருக்கமாக சொல்வதானால் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனிய படைகளுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இன்று வோல்கோ கிராட் என்று அழைக்கப்படும் ஸ்ராலின் கிராட்டில் நடைபெற்ற யுத்தம்.உலக வரலாற்றில் பல யுத்தங்கள் நடைபெற்ற போதிலும் இன்றுவரை பேசப்படுகிற அல்லது விமர்சிக்கப்படுகிற யுத்தங்கள் மிக குறைவானவை ஆனால் இன்று வரை ஸ்ராலின் கிராட் யுத்தம் பற்றி பேசப்படுகிறது அல்லது எழுதப்படுகிறது,தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகிறது,சவுத் ஏசியா அனலைஸ் குரூப் ஆய்வாளர் தற்போது இலங்கை நிலவரம் பற்றிய ஆய்வில் இந்த யுத்தத்தை மேற்கோள் காட்டிவிட எம்மவர் மத்தியில் ஸ்ராலின் கிராட் பற்றி அதிகம் பேசப்படுகிறது அதனால் விம்பமும் ஸ்ராலின் கிராட் யுத்தத்தினை நினைவு கொள்கிறது.


இரண்டாம் உலக யுத்தத்தின் ஐரோப்பிய அரங்கின் திருப்பு முனையாக கருதப்படும் இந்த சமர் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நீடித்தது,நீண்ட காலம் நடைபெற்ற ஒரு மரபு வழி சமராக இராணுவ ஆய்வாவாளர்களால் வர்ணிக்கப்படுகிறது.17 ஜூலை 1942 இற்கும் பெப்ரவரி2 1943 இற்கும் இடையில் நடைபெற்ற இந்த சமரில் மொத்தமாக 1.5 மில்லியன் பேர் பலியானார்கள்.இரண்டு நாள் இரண்டு வாரம்,இரண்டு மாதம் என ஹிட்லரால் எண்ணப்பட்ட நாட்களின் கனவு தவிடுபொடியானது.22 ஆம் திகதி ஜூன் மாதம் 1941 ஆம் ஆண்டி ஹிட்லரின் நாசி படை சோவியத் மீது பார்பரோசா என்ற பெயரில் படை நடவடிக்கையினை ஆரம்பித்தது.ஜேர்மன் படைகளும் அதன் கூட்டுப் படைகளும் விரைவாக சோவியத் பகுதிக்குள் ஆழ கால்பதித்தார்கள்.ஸ்ராலின் கிராட் மீது ஹிட்லர் படை எடுப்பதற்கு பிரதானமான இரண்டு காரணங்கள் இருந்தன.அவற்றுள் ஒன்று வால்கா நதிக்கரையில் அமைந்திருந்த இந்த நகரம் கஸ்பியன் கடலையும் வடக்கு ரஸ்ஸியாவையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து பாதையாக இருந்தது.மற்றய காரணம் எண்ணை வள பகுதியான க்கஸஸ் பகுதியை நோக்கி முன்னேறிய படைகளுக்கு பாதுகப்பாக இருக்கும் என்பதும் ஆகும்.இதனை விட உளவியல் ரீதியாக ஸ்ராலின் பெயரில் நகரம் இருந்ததும் ஸ்ராலின் கிராட் நகரை கைப்பற்ற ஹிட்லறை தூண்டியது.

ஜேர்மனிய 6 வது இராணுவத்துக்கு தலைமை தாங்கிய ஜெனரல் போலசின் பணி காகஸஸ் பகுதியில் உள்ள எண்ணை வழங்களை கைப்பற்றுவதாக இருந்தபோதிலும்,அதற்காக ஸ்ராலின் கிராட்டை கைப்பற்றுமாறு ஹிட்லரால் உத்தரவிடப்பட்டது.செய் அல்லது செத்து மடி என்பது போல தாக்குதலை மேற்கொள்ளுமாறு ஸ்ராலினால் உத்தரவிடப்பட்டது,தமது தலைவனின் பெயராலான நகரை காப்பதற்குபொது மக்களும் ஆயுதம் ஏந்தினார்கள்.இருவருக்கு ஒரு துவக்கு என்ற வகையில் ஆயுதம் வழங்கப்பட்டது.ஒரு அடி கூட பின்னகர வேண்டாம் என உத்தரவு பிறந்தது.பல இடங்களை ஜேர்மனியர்கள் கைப்பற்றியபோதும் அவற்றை நிலையாக தக்க வைக்க முடியவில்லை.பகலில் ஜேர்மனியர்கள் கைப்பற்றிய பகுதிகளை இரவில் ரஸ்ஸியர்கள் மீளவும் மீட்கப்பட்டது.அகல கால் பதித்த ஜேர்மனியர்கள் மீதான முறியடிப்பு சமரினை மேற்கொள்ள நவம்பர் 19 அளவில் ரஸ்ஸியா முழுமையான தயார் நிலையினை அடைந்தது.ஒரு மில்லியன் படைபலம் கொண்ட 6 படைப்பிரிவுகள் மார்ஷல் சுகோவ் தலைமையில் நகரை சுற்றிவளைக்க தயாராகினர்.வடக்கு பகுதியில் இருந்து ரமானன்கோ தலைமையிலான 5 ஆவது தாங்கி படையணி தாக்குதலை ஆரம்பிக்க 21,65,24.64,57,52 ஆவது படையணிகள் தெற்கு பகுதியில் இருந்து தாக்குத‌லை ஆர‌ம்பித்த‌ன‌.இரு முனை தாக்குத‌ல் அணிக‌ளும் ந‌வ‌ம்ப‌ர் 23 ஆம் திக‌தி காலாச் ப‌குதியில் இனைந்து கொண்டன.250 000 முதல்300 000 வரையிலான ஜேர்மன் படையினர் சுற்றி வளைக்கப்பட்டு பொறிக்குள்அகப்பட்டு கொண்டார்கள்.எவரும் சரணடைய கூடாது என்றும் இறுதி தோட்டா உள்ளவரை யுத்தம் செய்ய வேண்டும் எனவும் கட்டளை இட்ட ஹிட்லர் போலஸை ஊக்குவிப்பதற்காக பதவி உயர்வையும் வழங்கினார்.எவையும் வேலைக்கு ஆகவில்லை,கால நிலை மோசமானது,வெப்பநிலை பூச்சியத்துக்கு கீழ் சென்றது.ஆயுதங்களுக்கும்,உணவுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது,எதுவுமே செய்ய முடியாத நிலையில் ஜனவரி1943 இல் தென் பகுதி ப‌டையின‌ர் ச‌ர‌ண‌டைய‌ வ‌ட‌ ப‌குதி ப‌டைய‌ணி 2 ஆம் திக‌தி பிப்ருவ‌ரி ச‌ர‌ண் அடைந்த‌து.பெரும்பாலான‌ ப‌டையின‌ர் இற‌க்க‌ 91000 இற்கும் அதிக‌மானோர் சிறைப்பிடிக‌ப்ப‌ட்டார்க‌ள்.ஸ்ராலின் கிராட்டின் தோல்வியும்,படையணிகளின் இழப்பும் ஜேர்மனியால் ஈடு செய்ய முடியாது போனதை ஜேர்மனி மீது ரஸ்ஸியா படை எடுத்த தருணங்கள் உணர்தி நிற்கிறது.



ஹிட்லரின் தளபதிகள் ; போலுஸ்,மன்சுடெயின்,ரிச்தோபுன்,கொசுடாவ் ,கரிபால்டி,துமிதிரிஸ்கு,கொண்ஸ்டான்டினெஸ்.

ஸ்ராலினின் தளபதிகள் ;

ஸ்யிகொவ், யெமெரென்கோ,வஸ்யேவ்சுகி,கிரகொரி ,செம்யோன்,மலினொவ்சுகி .

படை பலம்


ஜேர்மன்;ஆட்பலம் 1 011 500 ஆட்லறி10,290 தாங்கிகள் 675 விமானங்கள் ;1,216.

ரஸ்ஸியா; ஆட்பலம் 1,000,500 ஆட்லறி 13,541 தாங்கிகள் 894 விமானங்கள் 1,115.


Read more...

  © Blogger templates vimbam by vimbam.blogspot.com 2008

Back to TOP